புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்

40
Next big leap by Producer Bazaar

புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்: தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025-ஐ நடத்தவுள்ளது

தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான TVAGA உடன் இணைந்து முக்கிய நிகழ்வை ஒருங்கிணைப்பதன் மூலம் பொழுதுபோக்குத் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது

In-article leaderboard

ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய அங்கமான புரொடியூசர் பஜார் தனது பயணத்தை தொடங்கிய நாள் முதலே தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்திய திரைத்துறை வர்த்தகத்தை செம்மைப்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் வெற்றிப் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக தெலங்கானா அரசின் ஆதரவு பெற்ற அமைப்பான தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நிகழ்வான இந்தியா ஜாய் 2025ன் முக்கியப் பகுதியான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை புரொடியூசர் பஜார் நடத்தவுள்ளது.

ஆங்கிலத்தில் பி2பி (B2B) என்று அழைக்கப்படும் தொழில்துறை நிகழ்வான இந்தியன் ஃபிலிம் மார்க்கெட், இந்திய திரைப்பட மற்றும் ஏவிஜிசி (அனிமேஷன், வி எஃப் எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளுக்கான பிரத்யேக வர்த்தக மையமாக செயல்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் படைப்பாளிகள் மற்றும் உள்ளடக்கத்தை வாங்குவோருக்கிடையேயான பாலமாக செயல்படும்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹைதரபாத்தில் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது. புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக‌ அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் டிவிஏஜிஏ பொதுச்செயலாளர் மைக் மாதவ ரெட்டி இதில் கலந்து கொண்டனர். டிவிஏஜிஏ தலைமை செயல் அலுவலர் ஷேக் காஜா வாலி, புரொடியூசர் பஜார் இணை நிறுவனர் விஜய் டிங்காரி இந்த முன்னெடுப்பில் முக்கிய பங்காற்றினர்.

Next big leap by Producer Bazaar

உள்ளடக்க‌ உரிமைகளை எளிதில் விற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளுடன், திரைப்படங்கள், இணையத் தொடர்கள், குறும்படங்கள், பிராந்திய படைப்புகள் உள்ளிட்ட அனைத்து வித படைப்புகளின் வர்த்தகத்திற்கான ஒற்றை சாளரமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் திகழும். அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், சன் நெக்ஸ்ட், ஜீ5, ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை இதில் பங்கேற்று படைப்புகளை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து பரிவர்த்தனைகளும் வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டில் வளரும் படைப்பாளிகள் தங்கள் கதைகள் மற்றும் திட்டங்களை தயாரிப்பாளர்கள், ஸ்டூடியோக்கள், ஓடிடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு எடுத்துரைக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தமிழ் திரையுலகை சேர்ந்த முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் நிர்வாகிகளை சந்தித்த புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக‌ அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு அவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அவர்களும் இசைவு தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக‌ அலுவலர் ஜி.கே. திருநாவுக்கரசு, “தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் இணைந்து இந்தியா ஜாய் 2025ன் இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்டை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். தமிழ் திரைத்துறையின் முக்கிய அங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கிறோம். படைப்பாளிகள் மற்றும் வாங்குவோருக்கிடையேயான முக்கிய பாலமாக செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here